
அது ஒரு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை, ஊரே அமைதி உருவெடுத்து அசையாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தது. சாலைகளும், தெருக்களும், சந்து பொந்துகள், மூலை முடுக்குகள் என எல்லா இடங்களும் முற்றிலும் துடைத்து எடுத்தது போன்று காலியாக இருந்தது. தலைமுறைகள் கேட்காமல் இருந்த சின்ன சின்ன பறவைகளின் சத்தங்களும் விலங்குகளின் ஓசைகளும் ஏன், சிறு சிறு பூச்சிகளின் ரீங்காரங்கள் கூட கேட்கும் வண்ணம் அத்தனை தூய அமைதி. வாகனங்கள் ஓடும் பாதைகளில் நாய் குட்டிகள் படுத்து புரண்டு கொண்டு இருந்தன. பூனைகள் செடிகளின் மீதுள்ள வண்டுகளை நோட்டம் விட்டு கொண்டு இருந்தன. மரச்செடிகளின் இலைகள், கோடை வெப்ப காற்றுக்கு மறுமொழி கூறிக்கொண்டு இருந்தன. அனைத்தும் சற்று மாற்றமாக இருந்தது. உலகமே தன் அனுதின செயல்பாடுகளை மாற்றி கொண்டு இருந்தது.
மனிதரெல்லாம் உயிரை காக்க ஓடி அலைந்து ஒடுங்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில் இயற்கை மட்டும் அதன் அன்றாட வாழ்வை தொடர்ந்தது. மாற்றமான உலகம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் கத்தரி வெயிலின் வெப்பம் தலைகளில் தாக்கம் செய்து கொண்டிருக்க… நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக தூங்கிவிட்டு, எழுந்திரிக்கலாமா? வேண்டாமா? என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேலையில் பளீரென்று கண்ணத்தில் ஒரு அறை விழுந்தது கண்கள் இரண்டும் கூசியது. வேறு யாரும் இல்லை சூரியன் சார் தான், நன்றாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு என்னையும் கண்ணத்தில் அடித்து எழுப்பி விட்டு வெப்பத்தில் வேக வைத்து கொண்டும் இருந்தார். ஊரடங்கு மே மாதமும் புதிதாய் வாங்கிய அன்ரூல்ட்(Unruled) பேப்பரும் ஒன்று இரண்டிலும் ஒன்றுமேயில்லை வெற்று பக்கங்களை தவிர… வேறு வழியின்றி பிடிக்காத நாளை எப்படியோ கடக்க வேண்டுமே என்று சலித்து கொண்டே விடியலை துவங்கினேன் பட்ட பகலில்.
மதியம் ஆக கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும், அப்போது தான் நாளின் முதல் உணவை முடித்து விட்டு மீண்டும் ஓய்வு நிலைக்கு சென்றேன். “இந்தா மா, சோப்பும் சர்ஃபும் வெயிலுக்கு முன்னாடி துவச்சிட்டு, அப்பறம் நல்லா வெயில்ல காய போடு… சீக்கிரம்… வெயிலுக்கு முன்னாடி…” என்றபடி அடுப்பறை நோக்கி நுழைந்தார் என் அம்மா. மூன்று நொடி குழப்பத்திற்கு பிறகு தான் தெரிந்தது, “நாளைக்கு நா துணி துவைக்கிற மா…” என்று நேற்று நான் சொன்னது நினைவுக்கு வந்தது. கொடுமை! இதுவரை என் வாழ்வில் நான் துணி துவைத்ததே இல்லை… (ஆமா, நீங்க நம்பலனாலும் அதான் நெசம்!)

வரலாற்றிலேயே முதன்முறையாக… என்பது போன்று என் துணிகளை நானே துவைக்க போகிறேன். இது ஒரு பெரிய சாதனை கிடையாது தான் (இதுவரை என் துணிகளை நான் துவைத்ததில்லை என்று சொல்வது கூட ஒரு வகை மானகேடு தான்). பொதுவாக நம் இல்லங்களில் நம் தாய்மார்களின் மற்றுமொரு வீட்டு வேலை இது… அவர்கள் இதையெல்லாம் பெரிதான ஒன்றாக நினைப்பதில்லை, பத்தோடு ஒன்று பதினொன்றாய் வந்து விடும் ஒவ்வொரு தனித்தனி வேலைகளும். அப்படி தான் நாமும் நம் சமூதாயமும் பழகி வருகிறோம். பெண்களின் வேலைகள் ‘வீட்டுவேலை’ அவ்வளவு தான்… அத்தனை சிறியது தான்… ஆனால் நம் வீடுகளில் உள்ள வேலைகளின் எண்ணிக்கையும் அதன் கடினங்களும் சிறு குழந்தை முதல் பெரியவர் வரை நாம் எல்லாருக்கும் நன்கு தெரிந்ததே. ஆனால் அவற்றை வெறும் ‘வீட்டுவேலை’ என்று தான் மொத்தமாக சொல்லி வருகிறோம், அவ்வளவு தான்.
வீட்டின் ஒவ்வொரு வேலையும் தனித்தனியாக பார்க்கப்பட வேண்டும், நம் அலுவலகங்களில் இருப்பது போன்று. தனித்தனி டிபார்ட்மெண்ட், தனித்தனி செயல்முறை, தனித்தனி வேலையாட்கள், தனித்தனி வேலைகள், முக்கியமான ஒன்று அதற்கு தகுந்தாற்போல் தனித்தனி ஊதியம் (Salary). எல்லாமே தனித்தனி வேலைகளாக அளவிடப்பட வேண்டும். அப்போது தான் நமக்கு புரியும் ஒவ்வொரு வேலையும் எத்தனை கடினமென… ஒவ்வொரு வேலையும் எத்தனை மதிப்பானது என…
“இன்னும் ஆரம்பிக்கலயா…?” உள்ளிருந்து ஒரு கேள்வி குரல். “ஹாம்… இதோ போறேமா!” என்றபடி மெதுவாக என்னை நானே தள்ளிக் கொண்டு நகர்ந்தேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் ரொம்ப நேரமாக என் அம்மா துணிகளை துவைத்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, இடைவேளை கூட இல்லாமல். அவருக்கு சிறிய ஆறுதல் அளிக்கும் விதமாக எப்போதும் போல, “நா வேணும்னா துவைக்கட்டுமா மா?..” என கேட்டேன் பாதி அக்கறையுடன், வேண்டாமென எப்போதும் போல மறுத்து விடுவார் என்று நம்பினேன். ஆனால், என் அம்மா என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை, “இப்போ நா துவச்சிட்ட… அடுத்த முறை நீ துவை!” என்று வெறுப்பில் சொன்னார் குரலை உயர்த்தி. கேட்டவுடன் பதில் வந்தது வழக்கத்திற்கு மாறான வார்த்தைகளுடன்… எப்போதும் நானே வேலை செய்ய கேட்டாலும் என் அம்மா மறுத்து விடுவார். இம்முறை மறுக்கவில்லை சொன்னதை மறக்கவுமில்லை. சரியாக இன்று மறக்காமல் துணிகளை எடுத்து தருகிறார், மீண்டும் உறுதி செய்ய சொப்பும் தருகிறார். நான் சற்று மானமுள்ள பெண்பால் என்பதால், மறுக்க முடியாமல் சென்று கொண்டிருக்கிறேன் துணிகளை துவைத்து எடுக்க.
நான் முதன்முறையாக துணிகளை துவக்க போவதால் எனக்கு துணி துவைக்க தெரியாது என்று மட்டும் நீங்கள் எண்ணி விட வேண்டாம். பிறந்தது முதல் துணி துவைப்பதை நன்றாக வேடிக்கை பார்த்திருக்கிறேன். எல்லா நுணுக்கங்களும் நன்றாகவே தெரியும். துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து சோப்பு நீரில் ஊறும் படி வைத்தேன் சிறிது நேரம் சென்றபின் ஒவ்வொன்றாக துவைக்க துவங்கினேன். என் நல்ல நேரம் வாஷிங் மிஷின் உபயோகத்தில் இல்லை. என் இரு திருக்கரங்களை கொண்டு தான் துணிகளை துவைத்து எடுக்க வேண்டிய கட்டாயம். நானெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு பிறந்து இருக்க வேண்டும், என்று நினைத்து கொண்டு, என்னை நானே கிண்டல் செய்தபடி துணிகளுடன் பணியில் ஈடுப்பட்டேன். இப்போது தான் நான் கவனிக்கிறேன் கடந்த சில நாட்களாகவே என் அம்மா கைகளால் தான் துவைத்து கொண்டிருக்கிறார். இத்தனை நாட்கள் எத்தனை வலியோடு இந்த துணிகளை துவைத்து இருக்க வேண்டும் (அம்மா! யூ ஆர் கிரேட்). நமக்கு வரும்வரை எந்த துன்பமும் நமக்கு துன்பமாய் தோன்றாது போல, பட்டறிந்தால் மட்டுமே எதையுமே நாம் உணர்கிறோம்… சரிதானே? இன்று தான் உணர்கிறேன் அவரின் கடுமையான நேரங்களை. என் அம்மாவின் கோபமுற்ற கடுகடுப்பு பேச்சுக்களுக்கு இது போன்ற உடல் சோர்வு தான் காரணமாக இருக்க முடியும். ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும் வலிகள் மறைந்திருக்கிறது என்று நமக்கு தெரிவதில்லை.

பெருமைக்கு சொல்லவில்லை, சற்று ஆர்வமுடன், மடமடவென துணிகளை துவைத்துக் கொண்டிருந்தேன். வேகமும், ஆற்றலும் துணிகளை தூய்மை படுத்திய வண்ணம் இருந்தன. துவக்கத்தில் நன்றாக தான் தெரிந்தது, எதையோ வெற்றிக் கொள்வது போன்று… போகப் போக தான் உணர்ந்தேன், காத்திருந்த வலியெல்லாம் ஒன்று சேர்ந்து என்னை சிறிது சிறிதாய் தாக்குதல் செய்ய துவங்கின. முதலில் இடுப்பு வலி பிறகு கைகள் என உடல் முழுவதும் வலிகள் அதிகமாயின. எத்தனை அதிகமான வலிகள், இத்தனையும் பொறுத்து கொண்டு எப்படி தான் நம் இல்லத்தின் அரசிகள் குறைக் கூறாமல் பல வருடங்களாக இந்த வேலைகளையெல்லாம் செய்து வருகின்றனரோ… மோசமான வேலைகள் இவையெல்லாம். ம்ம் ம்ம்….
இடையிடையே என் அம்மா என்னிடம் வந்து, “முடியலனா வந்திடு மா… நா துவச்சிக்கிற!” என்று சொல்லும் போது, ஒரு வகை நிம்மதியான ஆறுதல் கிடைத்தது எனக்கு கூடவே மனதுக்குள் ஒரு பாரமான உணர்வு, இத்தனை நாட்களில் நான் ஒரு நாள் கூட முழுமனதுடன் என் அம்மாவிடம் இதுபோன்று கேட்டதில்லை. கேட்டிருந்தால் அவரும் இதே போன்ற ஆறுதலை பெற்றிருப்பார், என்னை நானே ஒரு கொடிய பிறவியாக உணர்ந்தேன். இத்தனை நாட்கள், என் அம்மாவின் வலியை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறேன். தன்னலமாய், என் அம்மாவை சுரண்டியது மட்டுமில்லாமல், அவரின் உழைப்பில் குறையின்றி இளைப்பாறி இருக்கிறேன். அவரின் வேலைகளை குறைக் கூறி இருக்கிறேன். அவரின் உழைப்பில் என் உடலை சேதமின்றி வளர்த்திருக்கிறேன். மோசமான குணங்கள் எனக்குள் ஊடுருவி இருப்பதை நினைத்து கவலைப்பட துவங்கினேன்… இத்தனையும் நினைத்து கொண்டே, “வேணாமா! நானே துவைக்கிற…” என்று சொல்லும் போது தொண்டையில் ஒருவகை வலி தோன்றியது, குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு அது. அம்மா உள்ளே போனதும் துணிகளை கசக்கி மீண்டும் துவைக்க துவங்கினேன்.

வெவ்வேறு துணிகளை தனித்தனியாக துவைக்கும் போதெல்லாம் ஒன்றை கவனித்தேன். அதனை இதுவரை என் அம்மா சொல்லி காட்டியதில்லை. ஏன் பெரும்பாலான பெண்கள் இதனை ஒரு பொருட்டாக நினைத்து வெளியில் சொல்வதில்லை. அவர்கள் எல்லா துணிகளையும் ஒரே போன்று தான் பார்க்கின்றனர் ஆனால் அனைத்தும் ஒன்றல்ல. துணிகளின் எடை அதிகமாக இருக்கும் எனில், அவற்றை துவைக்கும் போது அதிக வலி ஏற்படுகிறது. அவற்றை கையாள கூடுதல் நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது. அது கொடுமையான வலிகள்… நாடி நரம்பெல்லாம் கதறி அழுவது போன்ற வலிகள். எடை அதிகமுள்ள துணிகளை நீருடன் சேர்த்து தூக்கி, இறக்கி, துவைத்து, அலசி, பிழிந்து காய வைப்பதற்குள் உடலை விட்டு உயிர் பிரிந்து வெளியே சென்று ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் வந்து உடலில் நுழைந்து வேலையை தொடரும் போன்று இருக்கும். அய்யோ! போதும் இந்த வாழ்க்கை என்றாகிவிடும் அந்த ஒரு எடையுள்ள துணிக்கு.
நம் உடைகளை நாமே துவைத்து கொண்டால் பிரச்சினை இல்லை, கேள்விகளும் இல்லை. தாராளமாக எந்த வகை ஆடைகளையும் நாம் வாங்கி போட்டு துவைப்பதில் விவாதம் இல்லை. தங்கள் துணிகளை தாமே துவைப்பது நற்பண்பு, அவ்வாறு செய்வோருக்கு கேள்விகளே இல்லை. மாறாக, நம்முடைய எடை அதிகமான மற்றும் துவைப்பதற்கு கடினமான, உயர்தர ஆடைகளை வீட்டிலுள்ள இன்னொருவர் துவைப்பது என்பது அபத்தம், அநீதி, எனக்கு ஏதோ ஒருவரின் உழைப்பும் நேரமும் சுரண்டப்படுவதாய் தோன்றுகிறது… அது தானே உண்மையும் கூட. ஆம், நம் வேலைகளை அடுத்தவர் மேல் சுமத்துவது சுரண்டலுக்கு சமம்.

பொதுவாக நாம் ஒரு ஆடையை அதன் தரத்தினை பார்த்து வாங்குகிறோம். அது உழைக்கும் நாட்களை கணக்கிட்டு வாங்குகிறோம். அது எவ்வளவு எடையுடன் உள்ளது என ஆராய்ந்து வாங்குகிறோம். குறிப்பாக ஆண்களின் ஆடைகள் அதிக திடத்தன்மை கொண்டதாகவே அமைந்து விட்டதால். அதனை துவைத்து முடிப்பதற்குள், ஒரு வனவாசத்தை முடித்து வருவது போன்ற உணர்வு தோன்றிவிடும் நமக்கு. இன்னும் குறிப்பாக சொன்னால் ஆண்களின் கால் சட்டைகள் (Pants, Jeans etc.) அய்யோ..! முடியாத வேதனைகள் அவை. அதற்காக ஏன்? ஆண்கள், Jeans போன்ற அதிக திட தன்மை கொண்ட ஆடைகளை அணிய உரிமை இல்லையா… போன்ற ஆணியம் சார்ந்த கேள்விகள் உடனே வரும், கொஞ்சம் பொறுங்கள்… பெண்களும் திடத்தன்மை அதிகம் உள்ள உடைகளை பயன்படுத்துகின்ற காலம் இது.
ஆண்கள் மட்டுமல்ல எல்லோரும் தாராளமாக அணியலாம். இவ்வுலகில், யார் வேண்டுமானாலும் அவரவருக்கு ஏற்ற எந்த வகையான ஆடைகளையும் அணிய உரிமைகள் உண்டு. ஆனால் இங்கு பிரச்சினை நாம் எடை அதிகமான ஆடைகள் அணிவது இல்லை, அதனை துவைப்பதற்கு அதிக கடினமாக இருப்பது தான். அதனை நாம் துவைக்காமல் வீட்டிலுள்ள அப்பாவிகளின் மேல் ‘கடமை’ என்ற பெயரில் திணிப்பது தான். அவரவர் தம்தம் துணிகளை தாமே துவைத்து கொண்டால் தாராளமாக எந்த வகை ஆடைகளையும் பயன்படுத்தலாம். அது யாரையும் சுரண்டாது… துன்பப்படுத்தாது… யாருக்கும் வலி கொடுக்காது… என்று சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது ஒன்று தோன்றியது. நமக்கு குறிப்பிட்ட வகை ஆடைகள் பிடிக்கும் என்பதற்காக வீட்டிலுள்ளோரை அடிமையாக்கி வாட்டி எடுப்பது என்பது கொடுங்குற்றம் என்று நன்றாக புரிந்து கொண்டேன். நானும் இனி அந்த தவறை செய்ய மாட்டேன். இனி நானும் திடத்தன்மை அதிகம் கொண்ட ஆடைகளை வாங்க போவதில்லை என முடிவெடுத்து கொண்டேன். அப்படியே வாங்கினாலும் அதனை யாருக்கும் துன்பம் வராத வண்ணம் நானே துவைத்து கொள்ள போகிறேன். உயர் தரமோ, அலங்காரமோ, ஆடம்பரமோ நம் அம்மாக்களின் வேலை சுமையை குறைக்க போவதில்லை என்று நன்றாக புரிந்தது எனக்கு.

ஒருவழியாக எல்லா துணிகளையும் தூய்மை படுத்தி, வெயிலின் கையில் ஒப்படைத்து விட்டு உள்ளே போனேன். பரிதாபமாக என்னை பார்த்தபடி, “ரொம்ப கஷ்டமா இருந்திச்சா மா… நீ பாதியில என்ன கூப்பிடுவனு நெனச்ச… ஆனா நீ ஏதும் சொல்லல!” என்று அம்மா என்னை கேட்டதும் அவர் குரலில் ஒலித்ததெல்லாம் இத்தனை வருடத்தின் மொத்த வலிகளின் உணர்வு மட்டுமே. (ஏனெனில் அவள் வலி அறிபவள்… காரணம் அதில் அவள் அனுபவம் பெற்றவள்) அம்மாவின் கண்களில் தடுமாறி கொண்டிருந்த அன்பை பார்த்தபடி “கஷ்டமா தா இருந்திச்சி மா… ஆனா, இத்தன நாளா நீ எப்படி துவச்சி இருப்பனு யோசிச்ச… நா பண்ணது பெரிய கஷ்டமா தெரியல… இனி என் துணிய நானே துவச்சிக்கிற மா!” என்று சிரித்த முகத்துடன் சொன்னேன், என் அம்மாவின் கண்களில் அன்பு சிரிப்பும், உதட்டில் மகிழ்ச்சி சிரிப்பும் தெரிந்தது. அன்று என் அம்மா எனக்கு பெரும் வீராங்கனையை போன்று காட்சியளித்தார்… என் அம்மா மட்டும் இல்லை, இதுபோன்ற ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அத்தனை அம்மாக்கள், மகள்கள், மாமியார்கள், மருமகள்கள், அக்காக்கள், தங்கைகள் என வீட்டு வேலைகளை குறை கூறாமல் செய்து கொண்டிருக்கும் அனைவருமே பலம் கொண்ட மாவீராங்கனைகள் தான்…
“அவர்களை ஆதரிப்போம்…
அவர்களை ஆறுதல் செய்வோம்!
அவர்களை போற்றுவோம்…
அவர்களை பாராட்டுவோம்!
அவர்களின் எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொள்வோம்..!”

குறிப்பு:
உலக ஆய்வுகளை எடுத்து பார்த்தால், உலகிலுள்ள பெண்கள் அதிகமாக உழைப்பை செலவிடுவது வீட்டு வேலைகள் செய்வதற்காக தான், அதற்கான அவர்கள் தகுந்த ஊதியம் எல்லாம் கேட்பதில்லை (Without Salary). கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஆறு மணி நேரம் வீட்டு வேலைகளை மட்டுமே செய்கின்றனர் நமது மதிப்பிற்குரிய இல்லத்தரசிகள். அலுவலக முழு வேலை நேரம் எட்டு மணி நேரம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதில் அலுவலகம் செல்லும் பெண்களின் பாடு பெரும்பாடு, வீட்டிலும் வெளியிலும் என வலிகள் மட்டுமே நிறைந்தது அவர்களின் வாழ்க்கை. கொடுமையான வாழ்க்கை!
2012 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில், இந்தியாவில் ஒரு சராசரி நகர்ப்புற நடுத்தர குடும்ப பெண் செய்யும் வேலையின் ஊதியம் கணக்கிடப்பட்டுள்ளது, ஒரு மாதத்திற்கு ரூபாய் 45,000/- வரை ஊதியம் கொடுக்கலாம் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கணக்கிடப்பட்ட அளவு, இன்றைய தேதிக்கு கணக்கிட்டால் குடும்ப தலைவர்களின் முழு வருமானம் போதாது போல தெரிகிறது. மேலும், நமது வீட்டின் பெண்கள் விடுமுறை இன்றி, ஓய்வின்றி 24/7 உழைப்பை அளித்து வருகின்றனர்.

இந்த ஆய்வுகளை குறிப்பிட்டதின் நோக்கம், ஆண்களை விவாதத்திற்கு நிறுத்துவதற்கோ அல்லது பெண்களின் உழைப்பை பட்டியலிடவோ அல்லது உழைப்பின் அளவை அளப்பதற்கோ இல்லை. மாறாக, நம் வீட்டு பெண்களின் உழைப்பு ஒப்பற்றது… விலைமதிப்பற்றது… காரணம் அவர்களின் உழைப்பு தூய்மையானது… அன்பு கலந்தது… நமக்கானது…
ஏன் ஆண்களின் உழைப்பும் நிகரற்றது தான்… மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் உடல் உழைப்பும் மதிப்பு பெற வேண்டிய ஒன்று. ஆனால், வீட்டு வேலைகளை பெண்ணின் பிறவி கடமை என கூறுவதும், வீட்டு வேலை செய்யும் ஆண்களை கேலி கிண்டலுக்கு ஆளாக்குவதும் என்று இன்னமும் நம் சமூகம் வளர்ச்சி இல்லாமல் கிடக்கிறது.
பெண்ணோ… ஆணோ… யாராயிருந்தாலும் அவர்களை அடிமை போன்று நடத்துவதும், அவர்களின் ஆற்றலை சுரண்டல் செய்வதும் குற்றமே!

உழைப்பின் மதிப்பை நாம் ஒவ்வொருவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம், நம் தாய்மார்களின் சுமைகளை பகிர்ந்து கொள்வோம்… வீட்டின் வேலையை பகிர்ந்து கொள்ளும் ஆண்களே உண்மையில் உயர்ந்த… சிறந்த… மாமனிதர்கள்.
இதில் ஆண் பெண் வேறுபாடில்லை…
மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் இது
சமமான நீதி!
சமூகநீதி!
உயிரியல் நீதி!
இயற்கை நீதி!
சரியான நீதி!
படைப்பு: லூயிசா மேரி சா
வாழ்த்துக்கு நன்றி!
LikeLiked by 1 person